Donnerstag, 7. August 2014

என் உணர்வின் மொழி

உலகம் முழுவதும் இன்று பேசப்படுகின்ற 6'000 மொழிகளில் அரைவாசிக்கு மேல் அழிந்து போகும் தருவாயில் உள்ளது என்று சென்ற ஆண்டு தாய்மொழி தினத்தில் யுனேஸ்கோ அமைப்பு அறிவித்திருந்தது. இதில் 2'500 மொழிகளிற்கு மேல் வெறும் 10'000ற்கும் குறைந்த மக்களால் மட்டுமே பேசப்படுகின்றது என்பது அதிர்ச்சியளிக்கும் தகவல். 

போர், இடப்பெயர்வு, வெளியேற்றப்படல் என்று பல தவிர்க்முடியாத காரணங்கள் இருந்தாலும் ஏனைய மொழிகளை, அழிப்பதில் முக்கியபங்கு வகிப்பது மொழிக்கலப்பு. மொழிகளின் அழிவில் முன்னிற்பது எந்த மொழியென்று ஆராய்ந்து பார்த்தால் அதில் ஆங்கிலமே முன்னிற்கின்றது. உலகளாவிய ரீதியில் ஆங்கிலத்தில் அச்சிடப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளை உள்ளூர் மொழிகளில் அச்சிடப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகின்றது.

அதிகாரத்தில் எந்த மொழி இருக்கின்றதோ அந்த மொழி ஏனைய மொழிகளை விழுங்க நினைத்தன் விளைவே உலக தாய்மொழி தினமாக 21. மாசி மாதம் பிறப்பெடுக்க காரணமாகவும் இருந்தது.

21. மாசி 1952 ஆம் ஆண்டு அன்றைய பாகிஸ்தான் தலைநகர் தக்காவில் ஊர்து மொழியை அரசமொழியாக்கும் தீர்மானத்திற்கெதிராக போராட்டம் வெடித்தது. அன்றை காலகட்டத்தில் வெறும் 3வீதம் பாகிஸ்தானியர்களால் பேசப்பட்ட மொழியே ஊர்து மொழி. துரதிஷ்ரவசமாக இந்த 3வீதத்தினரிடமே
பாகிஸ்தானின் அதிகாரம் இருந்தது. 56வீதமானவர்கள் பெங்காளி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தனர். ஒன்பது மாத உள்நாட்டு போரிற்கு பின்னர் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து தனிநாடாக 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் பிறப்பெடுத்தது. பங்களாதேசின் தேசியமொழியாக பெங்காளி மொழி அறிவிக்கப்பட்டது.

சுருக்கமாக சொல்லப்போனால் அதிகாரத்தில் உள்ள மக்களின் மொழி, அதிகாரத்தில் இல்லாதவர்களின் மொழிகளை விழுங்க நினைக்கின்றது.

இந்தியாவில் மட்டும் 750ற்கு அதிகமான பிராந்தியமொழிகள் நடைமுறையில் உள்ளன. ஒரு மொழியின் அழிவில் அதன் பாரம்பரியம் பண்பாடு போன்ற அனைத்தும் அழிந்துபோகின்றது என்று யுனேஸ்கோ அமைப்பு சொல்கின்றது. எனவே தான் யுனேஸ்கோ அமைப்பு தாய்மொழியில் கட்டாயக் கல்வியை வற்புறுத்துகின்றது.

குழந்தை பிறந்தவுடன் தானாகவே ஒரு மொழியை கற்றுக்கொள்ளும் திறனை பெற்றுக்கொள்கின்றது. நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான். அந்த குழந்தையுடன் பேசினாலே நாம் பேசுவதை உள்வாங்கி அந்த குழந்தை தனது தாய்மொழியின் அடிப்படையை கற்றுகொள்கின்றது.
அதன் பின்னர் ஆரம்பக்கல்வி அவர்களின் தாய்மொழி அறிவை மேலும் மெருகூட்டுகின்றது. ஆனால் ஆரம்பக்கல்வியே எமக்கு வேறொரு மொழியாக இருந்தால் கிட்டத்தட்ட நாம் தாய்மொழியற்றவர்களாகவே ஆகின்றோம்.எந்த மொழியிலும் முழுமையடையதவர்கள் ஆகின்றோம். எனவே தான் ஆரம்பக்கல்வியை தாய்மொழியில் தொடர்வது முக்கியமாகின்றது. தாய்மொழி கற்கும் போதே வேறொரு மொழியை கற்பதற்கான திறனை நாம் பெறுகின்றோம் என்கிறது அறிவியல்.
எனவே வேறொரு மொழியை கற்க முதல் தாய்மொழியில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாக அமைகின்றது. தாய்மொழியை முழுமையாக பயின்றவர்கள் இலகுவாக இன்னொரு மொழியை கற்றுக்கொள்வார்கள் என்பது ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை .

தாய்மொழியை முழுமையாக கற்க முதலே பாடசாலையில் வேறொரு மொழியை கற்பவர்கள் "அரைமொழி" (semilingualism) என்றழைக்கபடுகின்றார்கள். தாய்மொழியை விட வெறொரு மொழியை பெருமையாக கருதுவதாலேயே இந்நிலை உருவாகின்றது. என் மொழி என் அடையாளம் என்பதை பலர் உணர்ந்துகொள்வதில்லை. எத்தனை மொழிகளை கற்றறிந்தாலும் தாய்மொழியே உணர்வுகளின் மொழியாக இருக்கமுடியும்.

சுவிஸ் நாட்டை பொறுத்தவரை வெளிநாட்டு பிள்ளைகள் தங்களின் தாய்மொழியை கற்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். இதில் அவர்களிற்கு ஒரு சுயநலமும் உண்டு. தாய்மொழியில் சரளமாக யார் பேசுகின்றார்களோ அவர்களே இந்நாட்டு மொழியை விரைவாக கற்ககூடியவர்களாக உள்ளனர். சுவிஸ் நாட்டில் பேசப்படுகின்ற மொழிகளை வெளிநாட்டு பிள்ளைகளிற்கு இரண்டாவது மொழியாகவே அவர்கள் பார்க்கின்றனர். தாய்மொழியே அவர்களிற்கு முதல்மொழியாக கருதுகின்றனர்.

தங்கள் நாட்டு மொழியை வெளிநாட்டு பிள்ளைகளிற்கு முதல் மொழியாக பயிற்றுவிக்க அவர்கள் முற்படுவதில்லை. அது வெற்றியும் அழிப்பதில்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றார்கள். எனவே தான் இங்கே பல நூலகங்களில் ஒன்பதற்கு மேற்பட்ட மொழிகளில் நூல்களை வைத்துள்ளனர் என பேர்ண் மாநிலத்தல் அமைந்துள்ள ஒரு நூலகத்தின் இயக்குனர் தெரிவிக்கின்றார். தற்பொழுது சுவிசில் 14 நூலகங்களில் வெளிநாட்டு பிள்ளைகளின் தாய்மொழி திறனை அதிகரிப்பதற்காக அவர்களின் தாய்மொழியில் நூல்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டு வருகின்றனர்.

இவர்களில் யாரும் வேற்று மொழிகளிற்கு எதிரிகள் கிடையாது. மாறாக மொழிகளின் முக்கியத்துவம் அறிந்தவர்கள். ஆங்கிலம் மற்றும் பிரேஞ் மொழிகள் சிறுவயது முதலே இங்கே கட்டாயப்பாடமாக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற பரந்துபட்ட தேசங்களில் உள்ள நடைமுறைக்கும் ஜரோப்பிய நாடுகளில் உள்ள நடைமுறைக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. இங்கே அந்தந்த பிராந்தியங்களில் வாழுகின்ற மக்களின் மொழிகளே கல்விமொழியாகவும் பாடமொழியாகவும் உள்ளது. வேற்று மொழிகளிற்கேற்றாற்போல் பாடத்திட்டங்களையோ பாடங்களையோ மாற்றி அமைப்பதில்லை. சுவிஸ் போன்ற நான்கு மொழிகளை கொண்ட ஒரு சிறிய நாட்டில் அந்தந்த பிராந்தியங்களியிலயே கல்வி கற்றுக்கொடுக்கப்படுகின்றது. ஆங்கிலமோ பிரேஞ்சோ இங்கே ஒரு பாடம் மட்டுமே. இந்த மொழிகளும் ஒரு குறிப்பிட்ட வயதுவரையே கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மேற்படிப்பிற்காக தேர்ந்தெடுக்கின்ற கல்வியை பொறுத்தே இந்த மொழிகளை நாம் கற்க வேண்டுமா இல்லையா என முடிவாகின்றது.
ஆகமொத்தம் தாய்மொழி தவிர்ந்த வேற்று மொழிகளின் அடிப்படை தெரிந்திருந்தால் போதும் என்பதே இதன் பொருள். அதன் பின்னர் ஆர்வம் உள்ளவர்கள் விரும்பினால் தொடர்ந்து இம் மொழிகளை படிக்கலாம்.

அதிக மக்களால் பேசப்படுகின்றது என்ற ஒரே காரணத்திற்காக ஒரு மொழியை ஆட்சிமொழியாக்கலாம் என்றால், உலகிலயே அதிக மக்களால் பேசப்படுகின்ற சீன மொழியை உலக மொழியாக்க இரண்டாவது இடத்திலுள்ள ஆங்கியேர்களும் மூன்றாவது இடத்திலுள்ள "இந்தியர்களும்" சம்மதிப்பார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

Keine Kommentare:

Kommentar veröffentlichen