Donnerstag, 4. Mai 2017

நேட்டோ பயங்கரவாதிகள் - 1

ஐரோப்பா நோக்கி வரும் அகதிகளின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டிருக்கின்ற இந்த வேளையில், மக்களும் அரசியல்வாதிகளும் அதற்கான காரணிகளை அறிந்திருத்தல் வேண்டும்.

அதிகரித்துவரும் மக்கள் தொகை, வறுமை, சுற்றுச்சூழல் மாசுபடுதல், வேலையில்லா திண்டாட்டம், போன்றவற்றை விட இப்படியான இடப்பெயர்வுகளிற்கு முக்கிய காரணியாக இருப்பது எதுவென்று பார்த்தால் நிச்சயமாக போர்களாகத் தான் இருக்க முடியும்.

கடந்த ஆண்டுகளில் ஊடகங்களை ஆக்கிரமித்த இரண்டு விடயங்கள் போரும் பயங்கரவாதமும். ஆனால் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் உள்ள இந்த ஊடகங்கள் போரை யார் செய்தாலும் அது ஒரு சட்டவிரோதமான செயல் என்பதை மறைத்துவிடுகின்றன.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் உதயத்துடன் உலகளாவிய ரீதியில் போர் தடைசெய்யப்பட்டது.
இரண்டே இரண்டு விதிவிலக்குகள் உள்ளன: ஒரு நாடு தற்பாதுகாப்பிற்காக போர் தொடுக்கலாம், இரண்டாவது ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு ஐ.நா. பாதுகாப்புச்சபையின் ஆணை வேண்டும்.

இந்த இரண்டு விதிவிலக்குகளையும் தவிர்த்துவிட்டுப்பார்த்தால் போர் என்பது கடந்த 70 வருடங்களிற்கு மேலாக சட்டவிரோத செயலாக வரையறுக்கப்பட்ட ஒன்று.

தெருவில் செல்கின்றவர்களை ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்கின்றார் என்றால் அவர் சட்டத்தை மீறுகிறார். கொலை சட்டவிரோதமானது என்பது  நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு ஜனநாயக நாட்டில் கொலைசெய்தவர் காவல்துறையால் தேடப்படுவார். அவர் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் கொலைக்குற்றத்தின் பெயரில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு அதற்கான தண்டனையும் வழங்கப்படும்.

போர் என்பதும் கொலைக்களம். ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது ஆயுதம் கொண்டு தாக்கினால் அது ஒரு சட்டவிரோத செயல். போருக்கு உத்தரவிட்ட அந்நாட்டின் ஆட்சியாளர் இன்னொரு நாட்டின் மீது ஆக்கிரமிப்பு செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்டு சிறை செல்ல வேண்டியவர் ஆகின்றார். ஆனால் யதார்த்தத்தில் இது நடைபெறுவதில்லை. சாதாரண கொலைகாரர்களை விட இந்த அரசியல் கொலைகாரர்களிடத்தில் அதிகாரம் இருக்கின்றது. அதை வைத்தே அவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்கின்றார்கள். ஊடகங்களும் குற்றங்களை வெளிக்கொண்டுவந்து இவர்களை குற்றவாளியாக காட்டுவதில்லை.

இப்படியான தவறுகள் தூரநோக்கில் ஆபத்தானவை. பத்திரிகைகளிலும் தொலைக்காட்ச்சிகளிலும் காட்டப்படாத ஒன்று பொதுவெளியில் பேசாப்பொருளாகிவிடுகின்றது. இப்பொழுது அதிகரித்துக்கொண்டிருக்கும் அகதிகளின் வருகைக்கு நேட்டோ (NATO (North Atlantic Treaty Organization) ) படைகளின் போர்க்குற்றங்கள் தான் காரணம் என்பதை நாம் சிந்திக்க மறந்து வெறுமனே இந்த அகதிகளை ஐரோப்பாவிற்கு கொண்டுவரும் இடைத்தரகர்கள் மீதும், அந்நாட்டு கலகக்காரர்கள் மீதும் கோபம் கொள்கின்றோம். ஆனால் இவர்கள் இருவரையும் விட அதிக பங்கு நேட்டோ படைகளிற்கு உள்ளது.

வருடக்கணக்காக நடைபெற்று வந்த போர்களை பார்வையாளர்களாக மட்டுமே கடந்துவந்திருக்கின்ற எங்களால் ஒரு விடயத்தை அவதானிக்க முடியும். அமெரிக்காவால் வழிநடத்தப்படுகின்ற உலகத்தின் மிகப்பெரிய ராணுவக்கூட்டமைப்பான நேட்டோ 70 ஆண்டுகளுக்கு மேலாக அதிகபட்சமான சட்டவிரோத போர்களில் பங்குபற்றியிருந்த போதும், அவர்கள் தண்டனைக்குட்படுத்தப்படவில்லை. ஐ.நா. சாசனத்தின் விதிகளை மீறி போர்களை நடத்திய அமெரிக்காவும் நேட்டோவும் உலக அமைதிக்கு ஆபத்தானவர்கள்.

ஊடகங்களின் துணையோடு ஐ.நா. சபையின் விதிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றன. ஐ.நா. பாதுகாப்பு சபையில் மீண்டும் மீண்டும் பொய்களே பேசப்படுகின்றன.

2003ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அமெரிக்காவும் ஐக்கிய ராட்சியமும் சேர்ந்து ஐ.நா. சபையின் ஆணையில்லாமல் ஈராக் மீது ஒரு சட்டவிரோத போரை தொடுப்பதற்கு சிலமாதங்கள் முன்னர் ஈராக் மீதான போரிற்கு எதிராக சுவிட்ஸர்லாந்து தலைநகர் பேர்னில் ஒரு கண்டணப்பேரணி இடம்பெற்றது. 1945ற்கு பின் சுவிட்ஸர்லாந்து கண்டிராத ஒரு பேரணியாக 40'000 மக்கள் கலந்து கொண்டிருந்தனர். ஏனைய பல ஐரோப்பிய தலைநகரங்களிலும் மற்றும் வட அமெரிக்காவிலும் ஆயிரக்கணக்கானோர் தெருவில் இறங்கி போராடினர். அமெரிக்க ஜனாதிபதி ஜார்ச் புஷ்ஷிற்கோ அல்லது பிரிட்டிஷ் பிரதமருக்கோ இந்த ஆர்ப்பாட்டங்கள் பற்றி அக்கறை இருந்ததாக தெரியவில்லை. எதிர்ப்பு பேரணிகள் எல்லாவற்றையும் உதறித்தள்ளிவிட்டு மார்ச் மாதம் 2003ஆம் ஆண்டு ஈராக் மீது போரை தொடுத்து மத்தியகிழக்கு பிரதேசத்தை சீர்குலையச்செய்தது மட்டுமல்லாமல் ஐரோப்பியா நோக்கிய ஒரு அகதிகள் அலை உருவாக அடித்தளமிட்டார்கள்.

இந்த ஈராக் போரே தற்பொழுது சீரியாவை நிலைகுலையைச்செய்துகொண்டிருக்கும் IS பயங்கரவாத அமைப்பின் பிறப்பிடம் என்பது குறிப்பிடத்தக்கது.